சிவனை அடையும் வழி

19§

சைவ சமயிகளின் இயல்பான வாழ்க்கைமுறை யாது?§

ல்லோரும் வாழ்க்கையில் ஒரே பொருளைத்தான் நாடுகிறார்கள். மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ அன்புக்கு உரியவர்களாக, பாராட்டுக்குரியவர்களாக, படைப்புத்திறன் மிக்கவர்களாக, பயன்மிக்கவர்களாக இருக்க விரும்புகின்றனர். மனிதர்களின் இவ்வேண்டுகோளை நிறைவேற்ற சைவ சமயத்தில் ஆழமான மென்மையான கலாச்சாரம் உண்டு. உலகத்தைப் புரிந்துகொள்ளவும் இவ்வுலகில் நாம் வகிக்கும் பங்கு குறித்தும் அறிய உதவும்பொருட்டு அச்சமயத்தில் அதிகமான போதனைகள் உள்ளன. ஆன்மீக வாழ்வுக்கு மிக அவசியமான மேன்மையான குணநலன்களைப் பேணுவதற்கு—அதாவது பொறுமையோடும், கருணையோடும், சகிப்புத்தன்மையோடும், பணிவாக, கடும் உழைப்பாளியாக, பக்திமிக்கவராக இருப்பதற்கு—அது உதவுகிறது.§

சைவ சமயம் வீட்டையும் கோயிலையும் மையப்படுத்தியே இருக்கிறது. துறவற வாழ்வே அதன் மையமும் சக்தியும். இல்லற வாழ்வு பலமிக்கது மதிக்கத்தக்கது. தாயும் தகப்பனும் குழந்தையின் முதல் குருவாம். சைவ சமயத்தில் கலையும் கட்டிடக்கலைப் பொக்கிஷமும் உள்ளன. சங்கீதம், ஓவியம், நாட்டியம், நாடகம் என்று அழகிய பரம்பரை அதில் உண்டு. தத்துவ சுரங்கமும் அறிவுக் களஞ்சியமும் அச்சமயத்தில் உண்டு. பூசைக் காரிய சேவைகளை சைவக் கோயில்கள் அனுதினமும் வழங்குகின்றன. பக்தர்கள் ஆண்டவனின் அருகாண்மையில் இருக்கவும் அமைதியை அனுபவிக்கும் புனிதத் தலமாகவும் அவை விளங்குகின்றன. திருவிழாக்கள் என்றால் அது குடும்பத்துக்கே குதூகலமான நாட்கள்.§

சமயஞான நூல்கள் நம்மை நாம் அறியவும், செம்மையான வாழ்வு வாழ்வதற்கும் கடவுள்மீது பக்தி செலுத்துவதற்கும் உதவி செய்கின்றன. நமது மகான்கள் (ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள்) நமக்கு யோகம் மற்றும் வழிபாட்டு முறைகளை போதிக்கின்றனர். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஊக்கப்படுத்தி நமக்கு ஆன்மீகப் பாடமாக ஒழுக்கமாக அனுதினம் செய்ய வேண்டிய ஆத்ம சாதனைகளை வழங்குகிறார்கள். புலன் நுகர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி தூய மகிழ்வான வாழ்வு வாழ இந்த ஆத்ம சாதனைகள் நமக்கு உதவுகின்றது. சைவ இந்துக்களுக்கு வாழ்வின் அனைத்தும் புனிதமே. வாழ்வின் அனைத்தும் சமயமே. ஆகவே அவர்களுக்கு சைவ கலைகள் புனிதமானவை; சைவ சங்கீதம் தெய்வீகமானவை; சைவர்கள் செய்யும் தொழில்கள் அவர்களின் ஜீவாதாரம் மற்றுமில்லாமல் அது மனித குலத்துக்கும் ஆண்டவனுக்கும் அவர்கள் ஆற்றும் ஒரு சேவை. ஒரு சைவ இந்துவாக நீங்கள் இருப்பதற்கு நிறைய பாக்கியம் செய்திருக்கிறீர்கள். சைவ சமயத்துக்காக தைரியமாக எழுந்து நில்லுங்கள்.§

image§

shutterstock§

இங்கு தாயும் தந்தையும் ஒரு தட்டில் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து, தம் பிள்ளகளுக்கு இருளை நீக்கும் தீபத்தின் பொருளை கற்பிக்கின்றனர். இதற்கு முன் அந்த நால்வரும் அழகிய மலர் இதழ்களால் கோலம் வரைந்துள்ளனர்.§

குருதேவர்: சைவ சமயத்தின் மாட்சியும் அழகும் அதன் கலாச்சார வழக்கத்திலும், பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் எது என்ற ஞானக் கருத்திலும், ஆழமான ஞானமர்மமிக்க கோயில் அமைப்பிலும் சித்தயோகத்திலும் காணப்படுகின்றன.§