சிவனை அடையும் வழி

53§

நமது வீட்டு பூஜை அறையை எப்படி உபயோகிப்பது?§

வீட்டிலுள்ள பூஜையறை ஒரு குடும்பத்தின் கோயிலாகும். அது வீட்டின் இதயமாகும். நாம் கடவுளோடும் தெய்வங்களோடும் தேவர்களோடும் நெருக்கமாக இருக்க அந்த புனித இடத்துக்கு செல்கிறோம். நமது சமயத்தை உண்மையாக கடைப்பிடிக்க விரும்பும் அறிவார்ந்த இந்துக்கள் பூஜை அறைக்கென்று வீட்டில் ஒரு தனி அறை ஒதுக்குகிறார்கள். முழுக்க முழுக்க பூஜைக்கென்றே இந்த அறை உபயோகம் காண்கிறது. ஒரு கோயில் போன்ற சூழலில் அது உபயோகிக்கப் படுகிறது. மறைவாக இருக்கும் ஒரு சின்ன இடமோ அல்லது சிறிய புத்தக அடுக்கோ ஒரு தெய்வீக இருப்பிடத்தை உருவாக்க போதுமானதாக இருக்காது என்று அவர்களுக்குத் தெரியும்.§

விஷேசமான இந்த பூஜை அறையில்தான் ஒவ்வொரு நாளும் காலையில் பூஜை செய்யவும், ஞானசாத்திரங்கள் படிக்கவும், தியானம் செய்யவும், பஜனை செய்யவும், ஜெபம் செய்யவும் மற்றும் இதர சாதனா பயிற்சி செய்யவும் ஒன்றாகக் குடும்பத்தார் கூடுகின்றனர். திருநாள் காலங்களில் இன்னும் கூடுதல் நேரம் இதற்காக இங்கு ஒதுக்குகின்றனர். வாலிபர்களாக இருக்கும் நீங்கள் பூஜை அறையில் உதவிகள் செய்து அதை உங்களின் சிறப்பு இடமாக மாற்றிக் கொள்ளலாம். தினசரி வழிபாட்டுக்கு முன் பூந்தோட்டத்தில் பூக்கள் பறிப்பது, பிரசாதம் தயாரிப்பது, பூஜைப் பொருள்களை எடுத்து வைப்பது போன்ற கடமைகளைச் செய்யலாம். சமஸ்கிருத மந்திரங்களைக் கற்றுக்கொண்டு பெற்றோர்களோடு சேர்ந்து மந்திரங்களை சொல்லலாம். வீட்டிலே பூஜை அறை மட்டுமே மிகவும் அழகான அறையாக இருக்க வேண்டும். அந்த அறையைச் சுற்றிலும் உங்கள் குரு பரம்பரையின் படங்கள் அலங்கரிக்கப் பட்டிருக்கவேண்டும். பூஜை அறையில் சிவபெருமான், கணேசப் பெருமான், முருகப்பெருமான் திருவுருவ மேனிகள் இருக்கவேண்டும். எண்ணெய் விளக்குகள், ஊதுபத்திகள், மணி, தாம்பாளத் தட்டுகள், பூக்கூடைகள் இருக்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் கோயிலுக்குச் சென்று வந்ததும், பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி வைக்கவேண்டும். இது கோயிலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.§

பூஜை அறை தூய்மையாக இருந்தால் பலப்பல தேவதைகளும், உங்களின் சொந்த காவல் தேவதைகளும், அங்கே வந்து குடியிருப்பார்கள். குருதேவர் கூறியிருப்பதாவது: “கண்ணுக்குத் தென்படாத இந்த நிரந்தர விருந்தாளிகளுக்கு ஒரு தனியறை ஒதுக்கப்படுகிறது. அந்தத் தனியறையில் குடும்பமே புகுந்து அமர்கிறார்கள். பவித்திரமான இந்த தேவர்களோடு அவர்களால் உள்ளூர தொடர்பு கொள்ள இயலும். இந்த தேவர்கள் குடும்பத்தை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றக் கடமைப்பட்டவர்கள்.” ஒளிமயமான இந்த தேவர்கள் உங்களுக்கு அருள்புரிந்து உங்களைக் காக்கிறார்கள். உங்கள் வீட்டைப் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கென்று ஒரு வீட்டை நாம் நமது வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி எளிதாக நிலவுகிறது. ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகவும் நேசிக்கவும் எளிதாகிறது. சிவபெருமான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் எளிதாக உணரமுடியும்.§

image§

shutterstock§

விமரிசையான ஒரு காலை பூசை சடங்கைச் செய்ய ஒரு யாகக் குண்டத்தின்முன் ஒரு குடும்பம் பூசையறையில் அமர்ந்துள்ளது. அவர்கள் ஒன்றாக மந்திரம் ஓதி, நைவேத்தியம் அளித்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து தம் சாதனைகளை மேற்கொள்கின்றனர்.§

குருதேவர்: பூஜை அறையே ஒவ்வொரு சைவ இல்லத்தாரின் மையம். பிரத்தியேகமான அந்த அறையில் கோயில் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி அங்கு பூஜை செய்யவும், ஞானசாத்திரங்கள் படிக்கவும், சாதனா செய்யவும், தியானம் செய்யவும், பஜனைப் பாடவும், ஜெபம் செய்யவும் பயன்படுத்தப் படுகிறது.§