சிவனை அடையும் வழி

62§

நமது கோயில்களை நாம் எப்படி வலுப்படுத்த முடியும்?§

கோயில் என்பது கடவுளும் தெய்வங்களும் வாழும் இல்லம் என்று தெய்வாதீனமாக நாம் அறிந்து வைத்திருப்பதாலும், அவர்கள் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் நாம் கோயிலுக்கு அடிக்கடி செல்கிறோம். இது உங்களின் ஆன்மீக வாழ்வை பலப்படுத்தி கோயிலின் மதிப்புக்குரியதோர் அங்கமாகவும் சமூகத்தின் ஓர் அங்கமாகவும் ஆக்குகிறது. இது கோயிலை வலுப்படுத்தும் முதல் வழியாகும். கோயிலுக்கு நாம் அடிக்கடிச் செல்லச்செல்ல அங்குள்ள ஆன்மீக அதிர்வலைகளை உணரும் பக்குவம் பெறுகிறோம். நம்முள் அன்பு அல்லது பக்தி வளர வளர தெய்வங்களின் அருள் நம்மை இரக்கமுள்ளவராகவும், ஒத்துழைப்பு நல்கக்கூடியவராகவும், நேரத்தை தாராளமாக ஒதுக்கக்கூடியவராகவும் பண்படுத்துகிறது. கோயிலை வலுவாக்கி சேவையாற்றும் இரண்டாவது வழி யாதெனில் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அழகாக வரவேற்கும் வகையில் அங்கே கடமைகளை ஆற்ற உதவி செய்வதாகும். இது நமது சக்தியை உயர்த்தி பிற பக்தர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி தருகிறது.§

சேவையில் பல ரகம் உண்டு. கோயிலை அலங்கரித்து பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து ஆலய குருக்களுக்கு உதவலாம். பிரசாதம் சமைக்க உதவிசெய்து பக்தர்களுக்கு பரிமாற விரும்பலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கலாம்; நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம், மாலைகள் கட்டலாம், திருவிளக்குகளை விளக்கி சுத்தப்படுத்தலாம் அல்லது கார் நிறுத்துமிடத்தில் கார்களை நிறுத்த உதவலாம். சத்சங்கம், திருவிழாக்களில் பாட்டுப்பாடி ஆடி மகிழலாம். கடிதங்களை அனுப்ப உதவலாம் அல்லது கோயில் இணையதளத்தில் உதவலாம். ஆண்டுதோறும் நடக்கும் விழா காலங்களில் உதவுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விழா போன்ற திருநாட்களில் தெய்வத்தின் அருட்சக்தி மிகவும் அதிகமாக இருக்கும்போது நாம் கோயிலுக்குச் சென்று தெய்வத்தின் அருளுக்கு பாத்திரமாகிறோம்.§

இந்துவின் ஆன்மீக வாழ்வின் மையமாக கோயில் விளங்குகிறது. சைவர்கள் ஒருநாள் பயணத்துக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் ஆலயத்துக்கு அருகில் வாழ்வதே மிகவும் முக்கியம் என்று கருதுகிறார்கள். எனவே உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அங்கே ஒரு கோயிலைக் கட்டுகிறோம். கோயில் கட்ட உதவி செய்வதால் இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் நமக்கு புண்ணியம் கிட்டுகிறது. அது அடுத்த தலைமுறைக்கு நாம் அளிக்கும் ஓர் அன்பளிப்பாகும். ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு படியில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆலய வழிபாடு அவசியமாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று ஆன்மீகப் படியில் நாம் முன்னேற முன்னேற கோயில் வழிபாட்டின் பொருளும் அனுபவமும் ஆழமாக விரிகிறது. கோயில் வழிபாட்டை நாம் ஒருநாளும் கைவிட்டு விடுவதில்லை.§

image§

shutterstock§

ஐதராபாத்தில் கோல்கொண்டா கோட்டையில் நடைபெறும் போனாலு ஆண்டுவிழாவில் இரண்டு பெண்மணிகள் மலைக் கோயிலுக்கு செல்லும் எல்லா படிக்கட்டுகளுக்கும் குங்குமப்பொட்டு இடுகிறார்கள். இந்து கோயில்கள் வியக்கத்தக்க பக்தியை வெளிப்படுத்துகின்றன.§

குருதேவர்: இந்து சமயத்தில் தெய்வங்கள் உயிர் வாழ்கின்ற சிந்திக்கின்ற சக்திவாய்ந்த உயிர்கள் என்றும், அவர்கள் இவ்வுலகினுள்ளே உள்ளுலகில் நுண்ணுலகில் இன்னொரு லோகத்தில் வாழ்கிறார்கள் என்றும், கண்ணுக்குத் தெரிகின்ற இந்த பருவுலகத்தைவிட இன்னொரு பெரிய பருவுலகம் இருக்கின்றது என்றும் நம்புகின்றனர். கோயில் வழிபாட்டின் மூலம் மூவுலகங்களும் ஒன்றுக்கொன்று திறந்து கொள்கின்றன என்பதோடு, அவ்வுலகிலுள்ளோர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.§