சிவனை அடையும் வழி

24§

உயிர்களும் உலகமும் அடிப்படையில் நல்லவையா?§

யிர்களின் (ஆன்மாக்கள்) உட்தன்மை தெய்வீகமானது என்பதால் எல்லா உயிர்களும் அடிப்படையில் நல்லவையே. ஓவ்வொரு உயிரும் சிவபெருமானால் தன்னிடமிருந்து படைக்கப்பட்டது. தூய அன்பே சிவபெருமானின் இயல்பாகும். எனவே நன்மைகள், இரக்க குணம், புரிந்துணர்வு, மகிழ்ச்சி ஆகியன ஆன்மாவின் இயல்பான குணங்களாம். ஞானமும் தூய அறிவும் ஆன்மாவின் உள்ளார்ந்த இயல்புகள். இந்த உலகமும் இறைவனின் மாசற்ற படைப்பாகும். அனைத்துமே சரியான முறையில் சமச்சீரான முறையில் இயங்கி வருகிறது. கடவுள் எல்லா இடத்திலும் எல்லாவற்றிலும் இருப்பதால் தீமைக்கு அங்கே இடமில்லை. தீமையை கடவுளுக்கு எதிரான ஒரு சக்தியாகவே நாம் எப்போதும் பார்க்கிறோம். என்றாலும் எல்லா சக்திகளும் கடவுளின் சக்திகளே என்றும், அவை கீழ்த்தரமான துன்புறுத்தக்கூடிய செயல்களாக இருந்தாலும் கூட அவை கடவுளின் சக்திகளே என்றும் நமக்குத் தெரியும். இதை சிலவேளைகளில் புரிந்து கொள்வது சிரமம். ஒருவருக்கொருவர் துன்புறுத்தி பிரச்னைகளை உருவாக்குவதைக் காணும்போது இதனை நம்மால் புரிந்துகொள்ள இயலாது. இதனை ஆழமாகப் பார்க்கும்போது தீமைக்கும் வாழ்வில் ஓர் நோக்கம் உண்டு. ஆம்வாழ்வில் தீமைகள் நடப்பது உண்டு என்றாலும் சான்றோர்கள் அதற்காகக் கடவுளை குறைச்சொல்வதில்லை. நாமே உருவாக்கிய தீவினைதான் தீமை வடிவில் வந்திருக்கிறது என்றும், அவை நாம் பாடம் கற்றுக் கொள்வதற்கும் திருந்தி பக்குவப்படுவதற்கும் உதவி புரியும் கடுமையான வாழ்க்கைப் பாடங்கள் என்றும் நமக்குத் தெரியும்.§

இருமையே உலகின் இயல்பு. ஒவ்வொன்றுக்கும் எதிர்புறத்தை அது கொண்டுள்ளது. இன்பம் துன்பம், நன்மை தீமை, அன்பு வெறுப்பு என்று இருமையாகவே உள்ளது. துன்பத்தை முற்றிலும் தவிர்க்க இயலாது. அது மானுட வாழ்வின் இயற்கையான பகுதி. ஆன்மாவின் ஆன்மீக வளர்ச்சிக்கு அது மிகவும் உதவுகிறது. இவ்வுண்மையை உணர்ந்த அறிவிற் சிறந்த பெரியோர்கள் சுழற்காற்று, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, பஞ்சம், போர், நோய் அல்லது குடும்பத்தில் பேரிடர் என்று எப்படிப்பட்ட துயரங்கள் எங்கிருந்து எப்படி வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்கின்றனர். அத் துயரங்கள் மிக முக்கியமான பாடத்தை நமக்கு உணர்த்துகின்றன. இந்த உலகில் உண்மையான இன்பத்தையோ விடுதலையையோ நாம் காணமுடியாது என்றும், உலக இன்பம் துன்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதனைக் கற்றுக்கொண்டபின் துயரங்களைப் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்வது எப்படி என்ற பாடத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு சற்குருவை பக்தர்கள் நாடுகின்றனர். இந்த அழகிய உலகம் மிகப்பெருங்கொடை வள்ளலான கடவுளால் படைக்கப்பட்டது. இங்கு வினைப்பயன்களை எதிர்கொண்டு அறச்செயல்களாற்றி தன்முனைப்போடு நாம் வாழவேண்டும் என்பதே அவரின் பெருநோக்கமாகும். நாம் இவ்வுலகைப் பார்த்து நிந்திப்பதோ அல்லது பயங்கொள்ளவோ கூடாது. வாழ்க்கை என்பது இன்பமாக வாழ்வதற்கே.§

image§

shutterstock§

சந்திரனும் சனிகிரகமும் பின்புலத்தில் இருக்க நமது நீலக் கிரகம் பூமி வான்வெளியில் பறந்து செல்கிறது. விண்வெளியிலிருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள் தம் பொது அனுபவத்தை பிரமிப்பு, அழகு, நோக்கம் மற்றும் பூரண வடிவமைப்பு என்று விவரிக்கின்றனர்.§

குருதேவர்: இதுவே எனது அறிவுரை: முதலில் இவ்வுலகம் மிகவும் அற்புதமான உலகம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலகில் ஒரு குறையும் இல்லை என்று உணருங்கள். உலகில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எதை எப்படி கட்டாயம் செய்ய வேண்டுமோ அப்படியே சரியாகச் செய்கிறார்கள்.§